மாஸ்கோ: ரஷியாவில் 70 சதவீத ஆதரவுடன் விளாதிமீர் புதின் மீண்டும் அதிபராவார் என்று அந்நாட்டு ஊடகங்கள் கணித்திருந்ததை விஞ்சி 76.67% வாக்குகளுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) நடைபெற்றது. தற்போதைய தேர்தலில், அதிபர் விளாதிமீர் புதின் உட்பட எட்டுபேர் களத்தில் இருந்தனர். புதினுக்கு கடுமையான நெருக்கடியைக் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸி நாவல்னி சட்ட பிரச்னை காரணமாக இத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.
இதையடுத்து, பலத்த எதிர்ப்பு எதுவும் இன்றி இத்தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், 70 சதவீத பெரும்பான்மை ஆதரவுடன் புதின் மீண்டும் ரஷிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டிருந்தன.
முன்னாள் உளவுத் துறை அதிகாரியான புதின் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவரின் இரண்டாவது முறை பதவிக் காலம் 2008-இல் நிறைவடைந்தது. 
இதையடுத்து, அந்தப் பொறுப்பை தனது நம்பிக்கைக்குரிய திமித்ரி மெத்வதேவிடம் வழங்கினார். பின்னர் அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்தார். 
இருப்பினும், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து, 2012-இல் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார். அது முதல் தற்போது வரையில் அவர்தான் அதிபர் பதவியில் தொடர்கிறார். 
இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ரஷிய அதிபராக நான்காவது முறையாக புதின் பொறுப்பேற்று, 2024-ஆம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார்.  இதன் மூலம் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் அதிபர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையை புதின் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Close Menu