உருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோஃபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.
1920 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னி பெஸண்ட் அழைத்தார். அன்னி பெஸண்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமணம் அக்காலக் கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன்ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை உருக்மிணி கண்டதில்லை.
தமது கணவர் அருண்டேலைப் பற்றி கூறும் போது, அவரை இந்தியர்களை விடச் சிறந்த இந்தியர் என்றும் இந்திய நாட்டின் மேன்மையில், இந்திய நாட்டில் பிறந்த மகரிஷிகளின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் என்றும் பாரதப் பண்பாட்டைப் புரிந்து அதை நேசித்தவர் என்றும் உருக்மிணி தேவி குறிப்பிடுவார்.[1]
1933 ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935 ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.
சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார்.
உருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.
1977 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, உருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.
பெற்ற விருதுகள்
- பத்ம பூசண் விருது -1956
- காளிதாஸ் சம்மன் விருது
- சங்கீத நாடக அகாதமி விருது
0 Comments