மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோன்று, பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), ஒட்டுமொத்தமாக சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சிறந்த கல்லூரிகளில் சென்னை லயோலா கல்லூரி இரண்டாவது இடத்தையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 4 -ஆவது இடத்தையும், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி (டபிள்யூசிசி) 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து மத்திய அரசு சார்பில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம்.
இம்முறை பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல் கல்வி, மேலாண்மைப் படிப்பு உள்ளிட்ட 6 துறைகளின் கீழ் தனித்தனியே அந்தப் பட்டியல் வெளியிட்டது. இதைத்தவிர, ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை? என்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தரவரிசை வெளியிட்டது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இந்த ஆண்டு பொறியியல் கல்விப் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறையும் முதலிடத்தில் இருந்த அந்நிறுவனம், இந்த ஆண்டும் அதனைத் தக்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. (மேலும், ஒட்டுமொத்த பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது)
இதைத் தவிர ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்களும் சிறப்பிடம் பெற்றுள்ளன.
சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை லயோலா, திருச்சி பிஷப் ஹீபர், சென்னை டபிள்யூசிசி ஆகிய கல்லூரிகள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.
ஒட்டுமொத்த தர வரிசையில் சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐஐஎஸ்சி தேர்வாகியுள்ளது.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜேஎன்யு) பொருத்தவரை சிறந்த பல்கலைக்கழகங்களில் 2-ஆவது இடம் பிடித்துள்ளது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தத் தரவரிசைப் போட்டியில் கடந்த ஆண்டு 3,563 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முறை அந்த எண்ணிக்கை 2,995-ஆக இருந்தது. போட்டிக் களத்தில் இருந்த கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், சாதனைகளை ஆய்வு செய்து தற்போது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி: தரவரிசைப் பட்டியலில் பல்வேறு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் சிறப்பிடம் பெற்றுள்ளன. அந்தக் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கில், அவற்றுக்கு கூடுதல் நிதியும், தன்னாட்சி அதிகாரமும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவும். இதன் வாயிலாக கல்வித் தரமும் மேம்படும் என்றார் அவர்.
0 Comments